குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் தலித் என்றபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியில்லை என அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
இது குறித்து சென்னையில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தலித்துகளைக் குறிவைத்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத்தான் குடியரசுத் தலைவர் பதவிக்கான பாஜகவின் வேட்பாளர் அறிவிப்பு அமைந்திருக்கிறது.
வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர் என்பதால், பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தாண்டி எந்தவொரு முடிவையும் எடுப்பது என்பது சந்தேகம்தான்.
எனவே, அவர் தலித் என்றபோதும் பாஜகவின் அறிவிப்பை வரவேற்கவோ அல்லது மகிழ்ச்சியடையவோ இயலாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது.
இதனை முந்திக்கொண்டு எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவித்திருக்கவேண்டும். ஆனால், வரும் 22-ஆம் தேதி இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.
பாஜகவின் சதி முயற்சியை முறியடிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் அறிவிப்பு இருக்கவேண்டும் என்றார் அவர்.