சென்னை: சென்னை வர வேண்டிய இரு விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
அதிலும், கத்திரி வெயில் காலத்தில் தினமும் 100 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டனர். கத்திரி வெயில் நிறைவடைந்த பிறகு, தென்மேற்குப் பருவ மழை தொடங்கி, சில மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனாலும் சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், வளசரவாக்கம், கே.கே.நகர், அம்பத்தூர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.
சில இடங்களில் பலத்த மழையும் கொட்டியது. மழை காரணமாக, கொல்லகத்தா, ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வரவேண்டிய இரண்டு விமானங்களும் மழை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
அதிகமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 6.6 மிமீ, மீனம்பாக்கத்தில் 39 மிமீ மழை பெய்துள்ளது.