சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்த விசாரணையை அதன் ஆணையர் சம்பவ இடத்தில் நேரில் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், சம்பவத்தை விசாரித்து வரும் விசாரணை ஆணையர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனிடம் திங்கள்கிழமை (ஜூன் 19) மனு ஒன்றை அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் வழக்குரைஞர் சங்க பிரதிநிதி உதயபாஸ்கர் கூறியது:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாரணை நடைபெறும் இடம் குறித்து முறையாக தெரியவில்லை. எனவே, ஆணையர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டும்.
ஆணையத்தின் விசாரணைக் காலத்தை 6 மாதத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். விசாரணைக்கு வரும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயணப்படி கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலம் முடிவடைய இருப்பதால் நேரில் விசாரணை நடத்த இயலாது. அப்படி நடத்தினால் குறித்த காலத்துக்குள் விசாரணையை முடிக்க முடியாது என ஆணையர் ராஜேஸ்வரன் தெரிவித்து விட்டார். மேலும், விசாரணை ஆணையத்திடம் நூற்றுக்கணக்கான போலீஸார் தனிநபர்களாக மனு தாக்கல் செய்கின்றனர். இதை ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதற்கு எதிராக நீதிமன்றதில் வாதாட உள்ளோம் என்றார்.