தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் இரவு நேரத்தில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இலங்கை கடற்படையால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு உடனடியாக இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஏற்கெனவே இலங்கை சிறையில் உள்ள 11 தமிழக மீனவர்கள் உள்பட மொத்தம் 16 மீனவர்களையும், 136 விசைப்படகுகளை மீட்பதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.