தமிழகத்தில் தரமான உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது தொடர்பாக வணிகர் சங்கங்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் கலப்படம் இல்லாத தரமான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை வணிகர்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து தொடர்புடைய துறைகளின் கருத்துகளைப் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி உரிய தீர்வு காணப்படும்.
கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணிலோ,commrfssatn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.
பிளாஸ்டிக் அரிசி இல்லை: தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்து 3,124 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள 5 உணவு ஆய்வகங்களுக்குச் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை என்றார்.
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.