சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதுநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கான புதிய தகுதிப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அரசு அல்லாத சேவை மருத்துவர் சங்கத்தினர், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் கூறியது:
புதிய தகுதிப் பட்டியலை 3 நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி உத்தரவிட்டது. திங்கள்கிழமையோடு 3 நாள்கள் கெடு நிறைவடைந்தது.
மேலும், தமிழக அரசு உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு மட்டுமே செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றதின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால் மட்டுமே தகுதிப் பட்டியல் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
எனவே, புதிய தகுதிப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், மருத்துவக் கல்வி இயக்குநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்றார்.