விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற் ôகத் தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997-2000-ஆம் ஆண்டில் தமிழக அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் வெளிநாட்டிலிருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் வரை பணம் பெற்றது தொடர்பாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ஹைதர் அலி உள்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து கடந்த 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அனைவரும் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.தனசேகரன், விதிகளை மீறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்ற ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.