கர்ணனை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்ணனை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுதில்லி: கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் (62) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2015-ஆம் ஆண்டில் பணியாற்றியபோது, அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் உள்ளிட்ட சில நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்.
மேலும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்த கர்ணன், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், மார்ச் 31-ஆம் தேதி அவர் ஆஜரானார். அப்போது, வழக்குத் தொடர்பாகப் பதிலளிக்க அவருக்கு 4 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் பதில் எதுவும் அளிக்காத நிலையில் அவர் மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டதுடன், தனக்கு மனநலப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறி நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரைக் கைது செய்து ஆஜர்படுத்த மேற்கு வங்க காவல் துறைத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, சென்னையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன் தலைமறைவானார். பின்னர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் திரும்பப் பெறும்படி உச்ச நீதிமன்றத்தில் கர்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், வயது மூப்பு காரணமாக நீதிபதி கர்ணன் கடந்த 11-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இதையடுத்து, சென்னை மாநகரக் காவல் துறையினரின் உதவியுடன் மேற்கு வங்க காவல் துறையினர் நீதிபதி கர்ணனைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியை அடுத்த மாச்சேகவுண்டன்பாளையத்தில் ஒரு தனியார் வீட்டில் தங்கியிருந்த கர்ணனை செவ்வாய்க்கிழமை இரவு தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், அவரது வழக்குரைஞர் சார்பில் உச்சநீதிமன்றத்தில், கர்ணனை விடுவிக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை விடுவிக்க முடியாது. கர்ணன் குறித்த வழக்கில் தங்களால் எதுவும் செய்யமுடியாது எனவும் நீதிமன்ற விடுமுறை நாட்களுக்கு பிறகே 7 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வைக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com