மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவுப்பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது எஞ்சினில் இருந்து சிறிய அளவில் தீயுடன் கூடிய புகை வந்தது. இதனையடுத்து ஓட்டுநர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறங்கச் செய்தார்.
பின்னர் பேருந்தை சற்று தள்ளி நிறுத்துவதற்காக மீண்டும் இயக்க முற்பட்ட பொழுது தீ மளமளவென பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பினார்.
தீ குறித்து தகவல் அறிந்து, அச்சிறுப்பாக்கத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டுநரின் முன்னெச்சரிக்கையால் பயணிகள் முன்னரே கீழே இறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.