நீதித் துறையில் நடைபெற்று வரும் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் என கோவையில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கூறினார்.
கோவை அருகே தனியார் வீட்டில் கைது செய்யப்பட்ட கர்ணனை, பலத்த பாதுகாப்புடன் போலீஸார் சென்னை அழைத்துச் செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீதித் துறையில் நிலவும் லஞ்சத்துக்கு எதிராகப் போராடியதற்காக கைது செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நீதித் துறையில் லஞ்சம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
ஆனால், நீதித் துறையில் லஞ்சம் இருக்கக் கூடாது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இதுதான் என் மீதான வழக்குக்குக் காரணம். இதனைக் கூறியதற்காக என்னை எதற்கு கைது செய்ய வேண்டும்?
என் மீதான வழக்கு விவரங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான் நாட்டு நலனுக்காகப் போராடி வருகிறேன். ஆனால், நீதிபதிகள் தங்களது சொந்த நலனுக்காகப் போராடி வருகின்றனர். நீதித் துறையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் என்றார்.