கோவை: ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது தான் யோகா என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
3வது சர்வதேச யோகா தினம் இன்று புதன்கிழமை (ஜூன் 21) யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்று பேசினார்.
அப்போது, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் யோகாவின் முக்கிய நோக்கமாகும். உலக மக்களுக்கு யோகாவை பரிசாக அளித்துள்ளது இந்தியா.
மேலும், இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா உள்ளது. தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் யோகா கற்றுத்தரப்படும் என்று தெரிவித்தார்.