சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவு எம்எல்ஏ கருணாஸ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஒருமனதாக ஆதரிப்பதாக முதல்வரும் அதிமுக அம்மா அணியின் தலைமை நிலையச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தினகரன் ஆதரவாளர்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் தினகரன்.
தினகரனுக்கு 34 எம்எல்ஏக்களும், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக உள்ளனர்.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சில எம்.பி.,க்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் 34-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாஸ், மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆதரவு குறித்து எதுவும் ஆலோசனை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.