பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (ஜூன் 22) வெளியிடப்பட உள்ளது. இவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. திட்டமிட்டபடி ஜூன் 27-ஆம் தேதி தொடங்க வேண்டிய பி.இ. மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு, மருத்துவப் படிப்பு தகுதித் தேர்வான "நீட்' தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதமாவதால், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, "நீட்' தேர்வு முடிவு வெளியான பிறகே, பி.இ. கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பதை பல்கலைக்கழகம் அறிவிக்க உள்ளது.
இந்நிலையில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேருக்கு செவ்வாய்க்கிழமை சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
பி.ஆர்க். விண்ணப்பம்: பி.ஆர்க். கட்டடவியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 25-ஆம் தேதி தொடங்கப்படும்.