அதிமுகவின் இரு அணிகளும் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பது சந்தர்ப்பவாதம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவில் பிளவு ஏற்பட்டு கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை இரு அணியினரும் ஆதரிப்பது மிகுந்த வியப்புக்குரியது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த அரசியல் பாதைக்கும் எண்ணங்களுக்கும் மாறாக வகுப்புவாத பாஜகவின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு அதிமுக முனைந்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் தமிழகத்தின் உரிமைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன. இது சந்தர்ப்பவாதமாகும். இத்தகைய சுயநலப் போக்குகளுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலையிலிருந்து அதிமுக தப்ப முடியாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.