குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ வியாழக்கிழமை கூறினார்.
சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக உறுப்பினர் ராமஜெயலிங்கம் பேசியது: காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் பேசும்போது தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் எனக் கூறினார். அப்படி வருவதற்கு வாய்ப்பே இல்லை. வெள்ளை காக்கா பறக்கிறது என திமுக கூறினால், உடனே, வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்கிறது என காங்கிரஸ் கூறுகிறது. இப்படி இருப்பவர்களால் எப்படி காங்கிரûஸ வளர்க்க முடியும் என்றார்.
இதற்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தார். பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுவதற்கு அனுமதி தரவில்லை. அப்போது பேரவைக்குள் வந்த காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் பேசுவதற்கு அனுமதி கேட்டார். துணைத் தலைவர் அனுமதி அளித்தார்.
கே.ஆர்.ராமசாமி: காக்காவைப் பற்றி இங்கு உறுப்பினர் கூறுகிறார். காங்கிரஸ் பற்றி அவர் கூறியது தவறு.
ஆனால், அதிமுக அரசுதான் பாஜகவுக்கு ஆமாம் போடுகிறது. தற்போதைய அதிமுக அரசின் நடவடிக்கையால் மக்கள் உங்களைத் தண்டிக்கப் போகிறார்கள்.
அமைச்சர் செல்லூர் ராஜூ: குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, முதல்வரிடம் ஆதரவு கேட்டார். கட்சியின் தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ஆலோசித்து பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளோம். இதில் தவறு எதுவும் இல்லை. எங்களது தேவைகளை மத்திய அரசிடம் முறையிடுகிறோம்.
கிடைத்தால் பாராட்டுகிறோம். கிடைக்காவிட்டால் கேட்டுப் பெறுகிறோம். எங்களுக்கு யாரும் எஜமானர்களும் இல்லை. நாங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை என்று அண்ணா கூறுவார். இதையே காங்கிரஸ் உறுப்பினருக்குப் பதிலாக அளிக்கிறேன் என்றார்.