பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் புதுச்சேரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துளளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் பொலிவுறு நகரங்கள் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கும் வகையில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
முதல் கட்டமாக புதுவை சேதராப்பட்டு பகுதியில் பொலிவுறு நகரம் அமைக்க அதற்கான கோப்புகள் என்.ஆர்.காங் ஆட்சியில் அனுப்ப்பபட்டது. முதல் சுற்றில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அதற்கு ஒப்புதல் தரவில்லை. இரண்டாவது சுற்றிலும் ஒப்புதலுக்கு அனுப்பியும் மத்திய அரசு நிரகாரித்து விட்டது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்-திமுக கூட்டணி அரசு பதவியேற்றது. இதுதொடர்பாக அமைச்சரவையில் விவாதம் செய்து, புதுச்சேரியும் பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் இடம் பெறச் செய்யும் வகையில் சேதராப்பட்டு பகுதி இதற்கு பொருத்தமாக இருக்காது.
எனவே பாரம்பரியமாக பிரெஞ்சு கட்டடக் கலையைக் கொண்ட புதுவை நகரம் மற்றும் உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம் ராஜ்பவன், நெல்லித்தோப்பில் தலா ஒரு பகுதியை இணைத்து விரிவான வரைபடம் தயார் செய்து வல்லுநர்களுடன் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கோப்புகள் தயார் செய்யப்பட்டன.
பின்னர் மாநில அமைச்சரவையில் முடிவு செய்து நானும், அமைச்சர் நமச்சிவாயமும், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை செயலாளர்கள் தில்லி சென்று வரைவு திட்டத்தை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் அளித்தோம். அவரும் அதை பரிசீலனை செய்து புதுவை மாநிலத்துக்கு உதவுவதாக உறுதி கூறினார்.
பின்னர் நமது மாநில அதிகாரிகளும் தில்லிக்கு சென்று பலமுறை மத்திய அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தனர். இத்திட்டத்தில் குடிநீர், கழிப்பறை, வாகன வசதி, 24 மணி நேர மின்சாரம், நவீன தொழில்நுட்பம் போன்றவை தொடர்பாக ரூ.1850 கோடிக்கு திட்டம் தீட்டப்பட்டு அனுப்பப்பட்டது. இதில் மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.500 கோடி, பிரெஞ்சு அரசு ரூ.500 கோடி, வெளிச்சந்தையில் ரூ.350 கோடி என வழங்கப்படுகிறது.
தற்போது மத்திய அரசு பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் புதுவையைச் தேர்வு செய்துள்ளது. இதற்கான பட்டியலில் புதுவை 8-வது இடத்தைப் பெற்றுள்ளது. மத்திய அரசில் இருந்து முதன்முறையாக கிடைத்துள்ள பெரிய திட்டமாகும்.
நகரமைப்பு தொடர்பாக பிரெஞ்சு நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வோம். இதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசு அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் நாராயணசாமி.