சென்னை: படத்தயாரிப்பு உள்ளிட்ட பணிகளி ல் ஈடுபட்டு வரும் 'லைக்கா' நிறுவனம் பற்றி பொது வெளியில் பேச தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி வரும் '2.0' படத்தினை 'லைக்கா' நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இலங்கையில் அந்த நிறுவனம் ஈழப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என வீடுகள் கட்டி, அதை ரஜினி மூலம் திறந்துவைக்க என விழா ஒன்றுக்கு ஏற்படு செய்திருந்தது .
ஆனால் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்; எனவே நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.
இதனிடையே, கடந்த மார்ச் 25-ம் தேதி அன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன், லைகா நிறுவனத்தை அவதூறாக பேசியதாக சென்னை சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அந்நிறுவனத்தால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் நஷ்ட ஈடாக வேல்முருகன் ரூ 10 கோடி தர வேண்டும் என்றும் லைக்கா நிறுவனம் கூறியிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது வேல்முருகன் லைக்கா நிறுவனத்தை பற்றியோ, அதனைச் சார்ந்தவர்கள் பற்றியோ பொதுவெளியில் பேச இடைக்காலத் தடை விதிப்பதாகக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.