ஜூலை 17ல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு: சுகாதாரத்துறை அறிவிப்பு

நீட் தேர்வு முடிவு வெளியானதை அடுத்து ஜூலை 17ல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 17ல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு: சுகாதாரத்துறை அறிவிப்பு


புதுதில்லி: நீட் தேர்வு முடிவு வெளியானதை அடுத்து ஜூலை 17ல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 11 லட்சத்து 38,890 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் அதிகபட்சமாக ஆங்கிலத்தில் 9 லட்சத்து 13,033 பேரும் ஹிந்தியில் 1 லட்சத்து 20,663 பேரும் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தனர். தமிழில் தேர்வெழுத 15,206 பேர் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 10 லட்சத்து 90,085 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வு முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 6 லட்சத்து 11,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வை எழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி நாடு முழுவதும் மொத்தம் 470 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 65,170 எம்.பி.பி.எஸ். இடங்களும், 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாநில ஒதுக்கீட்டு இடங்களை அந்தந்த மாநில மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் கலந்தாய்வு மூலம் நிரப்புவர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் மாநில அரசே கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதியதில் சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியில் எழுதியுள்ளனர். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. மேலும் மொத்த மதிப்பெண் 720-க்கு தமிழக மாணவர்கள் சராசரியாக 300 மதிப்பெண் வரையே பெற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 17ல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும், வரும் 27 ஆம் தேதி முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஜூலை 7 ஆம் தேதி விண்ணப்பம் விநியோகம் நிறைவு பெறும். விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 14 ஆம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 17 ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com