சென்னை: இலங்கைக்கு கச்சத் தீவை தாரை வார்த்தது திமுக தான் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கண்ணதாசன் பிறந்தளை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் ஆகியோர் இன்று காலை மலர்தூவி மரியாதை செய்தனர்.
பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 1974 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி தான் இலங்கைக்கு கச்சத் தீவை தாரை வார்த்தார். அதுவரை இந்திய எல்லை கச்சத்தீவு வரை விரிவாக இருந்தது. 500 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடித்து வந்தனர். திமுக தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்க அதிமுக அரசு போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களையும் கைது செய்வதும், அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்வது கண்டிக்கத்தக்கது என்றார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் வரி ஜிஎஸ்டி வரிக்குள் வராது என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக இரு அணிகளும் தனித்தனியே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஒன்றாகவே இருக்கிறோம் என்றும் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையை அரசியல் சர்ச்சையாக்க வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.