சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் இன்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய விஜயபாஸ்கர், மருத்துவக் கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீடு போக 100 சதவீதத்தில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 15 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதற்காக 22 ஆம் தேதி தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 27 ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.