முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிதாக தகுதிப் பட்டியலை தயார் செய்து வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில் மே 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும் புதிய தகுதிப் பட்டியலை மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், புதிய தகுதிப் பட்டியல் வெளியிட வழங்கப்பட்ட கால அவகாசத்தை இரண்டு வாரமாக நீட்டித்து வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.
இம்மனு, நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்கக்கோரி அரசு சார்பில் முறையிடவுள்ளோம் என்றார்.
அப்போது ஏற்கெனவே மாணவர் சேர்க்கை தாமதம் ஆகி வரும் நிலையில், எப்படி கால அவகாசத்தை நீட்டிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அரசு தரப்பின் கோரிக்கை ஏற்று, புதிய தகுதிப் பட்டியலை வெளியிட ஜூன் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.