சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அமைந்துள்ள அரசு கல்லூரிக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியானது இதுவரை தாற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்தக் கல்லூரிக்கு அரசு அச்சக திட்டச் சாலை அருகில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், புதிதாக தொடங்கப்பட்ட பலவகை தொழில்நுட்பக் கல்லூரியானது தரமணியில் உள்ள மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கி வந்தது.
இந்தக் கல்லூரிக்கு தண்டையார்பேட்டை காமராஜர் சாலை அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தையும் முதல்வர் திறந்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, சட்டப் பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.