நாகையிலிருந்து ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையினரால் வெள்ளிக்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டனர்.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த வடிவேலு என்பவருக்குச் சொந்தமான படகில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சக்திவேல் (38), முகேஷ் (30), வினோத் (31), ரமேஷ்குமார் (28), ராஜசேகர் (30), செல்வம் (32), சங்கர் (48), செந்தில் (28) ஆகிய 8 பேரும் கடந்த புதன்கிழமை நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு கோடியக்கரைக்குத் தென்கிழக்கு கடல் பரப்பில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்களை கைது செய்து, மீன்பிடி படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர், மீனவர்கள் 8 பேரும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 61 நாள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின்னர் கடந்த 15}ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பைத் தொடங்கியுள்ள நிலையில், 10 நாள்களுக்குள் தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகள், மீனவர்களிடையே தொழில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.