விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (55), கார் டிரைவர். இவரது மகன் செந்தில் (35), இவரது மனைவி தேவிபாலா (29). இருவரும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகின்றனர். உறவினர்கள் கார்த்திக் (35), ராஜமாணிக்கம் மகன் தியாகராஜன் (40). இவர்கள் 5 பேரும் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் புறப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த கோ.மாவிடந்தல் கிராமம் அருகே சென்றபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக கார் சாலையோரம் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து நடராஜன், செந்தில் இறங்கினர்.
அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, கார் மீதும், அதனருகில் நின்றிருந்த நடராஜன் மீதும் மோதிவிட்டு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நடராஜன், அவரது மருமகள் தேவி பாலா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த கார்த்திக், தியாகராஜன் ஆகியோர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தின்போது செந்தில் சற்றுத் தொலைவில் நின்ôல் உயிர் தப்பினார். சொகுசுப் பேருந்தில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாயகம் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.