கோவை கங்கா மருத்துவமனை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஆம்புலன்ஸ் சேவையை விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, ஏர் ஆம்புலன்ஸ் ஒத்திகையைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஏர் அம்புலன்ஸ் சேவை உதவியாக இருக்கும். கடந்த 1999}ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் காயமடைந்த ராணுவ வீரர்கள் பலர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தில்லி, சண்டீகரில் உள்ள ராணுவ மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்திய விமானப் படை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் குழு கடந்த 2007}ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 17 விமானங்கள் ஏர் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்காக தனியார் மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
இந்நிகழ்ச்சியில், கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சண்முகநாதன், இயக்குநர்கள் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகர், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. பாரி, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.