தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மட்டும் 100 டிகிரி வெயில் பதிவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி தேனி மாவட்டத்தில் 70 மி.மீ., வால்பாறையில் 60 மி.மீ., நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தில் 30 மி.மீ. மழை பதிவானது. சென்னை, சேலம், செஞ்சி, விராலிமலை, நாகப்பட்டினம், குளச்சல், செய்யாறு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றனர்.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
தொண்டி 100
மதுரை 99
சென்னை 98