நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீ.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1.95 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளை, அமைச்சர் சீ. சீனிவாசன் துவக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவதில் உண்மை இல்லை. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், நீட் தேர்வினை மத்திய அரசு நடத்தி முடித்துவிட்டது. தமிழக மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதா, வேண்டாமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்றார்.