அதிமுக விலிருந்து டி.டி.வி.தினகரன் பதவி விலக வேண்டும் என அரக்கோணம் எம்.பி. கோ. அரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் திருத்தணியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் ஒன்றுகூடி அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசி ஒருமனதாகத் தான் முடிவு செய்தோம்.
ஆனால், தற்போது மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை சசிகலாவின் ஆணைக்கிணங்க ஆதரிப்பதாக கூறி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் தேர்தல் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினகரன், சிறையிலிருந்து வந்ததும், கட்சியில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் அதிகாரம் இருப்பதாகக் கூறுவது ஏற்பதாக இல்லை.
கட்சிக்கும், ஆட்சிக்கும் சம்பந்தமில்லாத தினகரன் எவ்வளவோ சலுகைகளை அனுபவித்திருந்தாலும் இனிமேலாவது அவர் கட்சியிலிருந்து ஒதுங்கி அதிமுகவை வாழ வைக்க வேண்டும் என்றார்.