காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றி தூண்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருவதால் அந்த கம்பங்கள் விழுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில், சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை பிரியும் இடத்தில் மின்சார வாரியம் சார்பில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் வெயிலிலும், மழையிலும் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருகிறது. அதில் உள்ள இரும்புக் கம்பிகளும் துருப்பிடித்து வருகின்றன.
நெடுஞ்சாலையில் அந்த மின்மாற்றி விழுந்து விபத்துக்குள்ளானால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.