கடலூர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து, பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனஞ்செயன். மாற்றுத் திறனாளியான இவர், கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி கலைவாணி(26). இவர்களுக்கு யோகலட்சுமி (4), நகுலன் (2) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கலைவாணி 3- ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார்.
ஆனால், கருவைக் கலைக்க முடிவு செய்து கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை சேர்ந்தார். அவருக்கு வெள்ளிக்கிழமை கருக்கலைப்பு நடைபெற்ற நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கலைவாணி திங்கள்கிழமை உயிரிழந்தார். மருத்துவர்கள் தவறாக சிகிச்சை அளித்ததே கலைவாணியின் இறப்புக்கு காரணமென அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பாமக மாவட்டச் செயலர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் அரசு மருத்துவமனைக்கு வந்து, மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் மருத்துவமனை முன் கடலூர் - பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைவாணியின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் மருத்துவமனை சார்பில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் (பொ) சுப்பிரமணியன், இருக்கை மருத்துவர் சண்முகக்கனி மற்றும் வட்டாட்சியர் ப.பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறுகையில், அப்பெண்ணுக்கு சரியான முறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பே அவர் கருவைக் கலைக்க நாட்டு மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
இதில் உடல் நலிவடைந்த நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு ரத்தம் ஓட்டம் குறைவாக இருந்தது என தெரிவிக்கப்பட்டது.