தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை வெளியிட்டுள்ளது.
1. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை பயிற்சிக்கு தடகளப் பயிற்சி மையம் மற்றும் அணிவகுப்பு பயிற்சி மையம் கட்டுதல்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவியரின் பயிற்சிக்கென ஒரு தடகளப் பயிற்சி மையமும் (Obstacle Course), அணிவகுப்பு பயிற்சி மையமும் (Drill Parade Square) சுமார் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
2. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் விளையாட்டு பயிற்சிகள் பெற்றிட கூடைப்பந்து, மேஜைப்பந்து மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டுக் களங்களை உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் கூடிய, உள்விளையாட்டு அரங்கம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
3. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டுதல்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவ்விடுதி வளாகத்தைச் சுற்றிலும் சுமார் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டப்படும்.
4. வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் புதிய மாணவியர் விடுதி கட்டடம் கட்டுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சுமார் 100 மாணவியர் தங்கி பயிலும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதி கட்டடம் கட்டப்படும்.
5. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல்
செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் சுற்றுச் சுவர் கட்டுதல், ஒருங்கிணைந்த குடிநீர் வசதி வழங்குதல், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைத்தல், கல்லூரியிலிருந்து விடுதிக்குச் செல்ல அணுகு சாலை அமைத்தல் மற்றும் அச்சட்டக்கல்லூரி விடுதிகளுக்கு நவீன சமையல் அறை உபகரணங்கள் அளித்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
C.P.சரவணன், வழக்கறிஞர்
9840052475
Source:
சட்டத் துறை மானியக் கோரிக்கை எண் - 33