சேலத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியிடம் வழிப்பறி
சேலத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியிடம் வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி(40). இவர் ஈரோடு அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னை செல்வதற்காக அங்கிருந்து பேருந்தில் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வந்துள்ளார்.
இரவு சுமார் இரண்டரை மணியளவில் அங்கு சென்னை செல்வதற்காக தனியார் நிறுவன சொகுசுப் பேருந்தை தேடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்து நபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, சொகுசுப் பேருந்துக்கு தான் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அவருடன் மேலும் இரண்டு பேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டனராம்.
பின்னர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் பகுதியில் ஆட்டோ செல்வதை அறிந்த கொட்டாச்சி, சந்தேகமடைந்து சேலத்தில் உள்ள மற்றொரு நகைச்சுவை நடிகர் பெஞ்சமினை செல்லிடப்பேசியில் அழைத்துள்ளார். ஆனால் இரவு நேரம் என்பதால் அவர் செல்லிடப்பேசியை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், ஆட்டோவில் வந்த நபர் திடீரென கொட்டாச்சியிடம் இருந்த செல்லிடப்பேசியைப் பறித்து, அவர் அணிந்திருந்த 2 சவரன் நகை மற்றும் பர்சையும் பறித்துக் கொண்டு, அவரை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினராம்.
இது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் கொட்டாச்சி புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.