தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் ஆஜர்
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சபா ராஜேந்திரன் ஆகியோர் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டார். அவரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், தவாக தலைவர் தி.வேல்முருகன், முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரி, திரைப்பட நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இவர்கள், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து வேறிடத்தில் பிரசாரம் செய்தது உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாக பண்ருட்டி போலீஸார் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து ராமதாஸ் கடந்த வெள்ளிக்கிழமை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி (பொறுப்பு) கணேஷ் முன்னிலையில் ஆஜரானார். ஆனால், தொல்.திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் ஆஜராகாததால் அவர்களுக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணையை 27-ம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சபா ராஜேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.