சென்னை: முகநூலில் தொடர்ந்து தன்னைப்பற்றி அவதூறு பிரச்சாரம் செய்த இரண்டு நபர்கள் மீது பாரதிய ஜனதா மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளராக இருப்பவர் வானதி ஸ்ரீனிவாசன். அக்கட்சியின் சார்பாக தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அத்துடன் சமூக வலை தளங்களிலும் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் முகநூலில் இரண்டு நபர்கள் தொடர்ந்து ஆட்சேபிக்கத்தக்க வகையிலான கருத்துக்களை எழுதி வந்தனர். அவர்களுக்கு உரிய எச்சரிக்கைகள் விடுத்தும் அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக வானதி ஸ்ரீனிவாசன் இன்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட இரண்டு நபர்கள் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்களுக்கு முன்னரே இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வானதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.