திருத்தணியில் வீட்டின் கதவுப்பூட்டை உடைத்து ரூ. 6. 10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருத்தணி அக்கைய்ய நாயுடு சாலை தொலைபேசி அலுவலகம் பின்புறத்தில் வசிப்பவர் நாராயணன் (54).
இவர், மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, கீழ் தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, நாராயணன் குடும்பத்தினருடன் மேல்தளத்தில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
திங்கள்கிழமை அதிகாலை, நாராயணன், கீழ்தளத்தில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவையும் உடைத்து, அதிலிருந்த ரொக்கம் ரூ. 6.10 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணன் அளித்த புகாரின்பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.