ஆற்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
ஆற்காட்டை அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சந்திரா (65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். சந்திரா தனது வீட்டில் தனியாக
வசித்து வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை சந்திரா வீட்டிற்கு வந்த மர்ம நபர், சந்திராவிடம் குளிர்பானத்தைக் கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்தினாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த சந்திராவை கழுத்தை நெரித்து, முகத்தில் கடித்துள்ளார். இதனால் அவர் கூச்சலிட்டார். சப்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்தபோது, அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதையடுத்து காயமடைந்த சந்திராவை ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்திரா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து திமிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.