கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ளச் செய்திக்குறிப்பு: கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கி கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்தக் கல்வி உதவித் தொகைகளைப் பெற 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வி உதவித்தொகை எவ்வளவு: "ஸ்பாஸ்டிக்' போன்ற பாதிப்பு கொண்ட சிறப்புக் கல்விப் பயிற்சி தேவைப்படுகிற மாணவ, மாணவிகள் 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு ரூ 10 ஆயிரம், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 500, பாலிடெக்னிக் அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் என்ற அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் குறித்த முழு விவரங்களைப் பெற மாணவ, மாணவியர் தங்களின் முழு முகவரி எழுதப்பட்ட ரூ.5 தபால்தலை ஓட்டப்பட்ட உறையினை, மதிப்பெண் விவரங்கள் அனுப்பும் கடிதத்துடன் வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள், "நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, புது எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர், அடையாறு, சென்னை} 600 020' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.