புதுதில்லி: தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் இனி தமிழும் இடம்பெறும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில் பயணம் செய்வோரின் நலன்களை பாதுகாப்பதற்கு என்று ரயில்வே பயணியர் நலச்சங்கம் உள்ளது. அதன் சார்பாபாக மாதாந்திர கூட்டங்கள் நடைபெறும். அதில் பயணிகள் தொடர்பான பல்வேறு விஷயங்களும் விவாதிக்கப்படும்.
இத்தகைய கூட்டங்களில் நாடு முழுவதும் ரயில்வே டிக்கெட்டுகள் வழங்கப்படும் பொழுது, அந்த பிராந்தியத்தின் பெரும்பாமை மொழிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வெகுநாட்களாக வைக்கப்பட்டு வந்தது.
தற்பொழுது இந்த கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்வதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பு இரண்டொரு நாட்களில் வெளிவருமென்று கூறப்படுகிறது.
எனவே தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன் இனி தமிழும் இடம்பெறும். இந்த நடைமுறையானது வரும் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.