தில்லி: பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி அளிக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில்,தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில குட்கா நிறுவனங்களில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், தமிழகத்தில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி அளிக்க, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் மீது தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடத்த திமுக அனுமதி கோரியது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால், சபையில் இருந்து இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி நட்டா தில்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் தற்பொழுது ஆலோசனை நடத்தி வருகிறார்.
அநேகமாக இந்த விவகாரம் குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.