ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதில் மத்திய அரசு நிதானம் காட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் ஒரே வரி என ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டி வருகிறது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் ஜூலை 1 }ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறையால் சில்லறை வணிகம் முற்றிலும் அழிந்து, பெரு நிறுவனங்கள் வளரவே வழி ஏற்படும் என வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 30 }ஆம் தேதி கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
சிவகாசியில் பட்டாசு தொழில் கூடங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. எனவே, ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதில் அவசரம் காட்டாமல் நுகர்வோர், வணிகர்ளின் கருத்துக்களை அறிந்து செயல்படுத்திட மத்திய அரசு முன்வர வேண்டும்.