விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டியில் தீப் பற்றியதில் சேதமடைந்தது.
பாண்டிச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு பயணிகள் ரயில் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு வந்தது. அந்த ரயில் மூன்றாவது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த ரயிலில் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார்டு பெட்டிக்கு முந்தைய பெட்டியிலிருந்து புகை வந்ததை ரயில் நிலைய ஊழியர்கள் கண்டனர். இதுகுறித்து உடனடியாக விழுப்புரம் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பெட்டியின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜன்னலை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இருப்பினும், ரயில் பெட்டியின் இருக்கைகள் உள்ளிட்டவை தீயில் சேதமடைந்தது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததா? நாசவேலை எதுவும் காரணமா? என்பது குறித்து ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.