கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால், பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.
இப்பூங்காவில், சீசனுக்காக 30-க்கும் மேற்பட்ட வகைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பல மாதங்களாக மழை இல்லாததால் அவற்றின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்ததால், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் நடவு செய்யப்பட்டுள்ள கிருசாந்திமம், ஆரணத்திக் கோலம் மற்றும் ரோஜாச் செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.
இதுகுறித்து கொடைக்கானல் பூங்கா மேலாளர் பிரியதர்சன் கூறியது:
கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்ததால், பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலர்ச் செடிகளில் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
செடிகளுக்கு உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், மண் கட்டுதல், களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெறும். மே மாதம் நடைபெற உள்ள 56-ஆவது மலர்க் கண்காட்சியின் போது இங்கு லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்கும் என்றார்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள ஆரணத்திக் கோலம் மலர். (வலது) கிருசாந்திமம் பூ.