சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.அதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு எப்பொழுது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:
சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான முறையான தேர்தல் அறிவிப்பு மார்ச் 16-ஆம் தேதி அன்று வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மார்ச் 23-ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளாகும். மறுநாளான மார்ச் 24 அன்று வேட்பு மனுக்களை பரிசீலனை நடைபெறும்.
மார்ச் 27-ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.பதிவான வாக்குகள் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று எண்ணப்பபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.