இனிமேல் மீனவர்கள் உயிரிழப்பு நிகழக்கூடாது: தங்கச்சிமடத்தில் மத்திய அமைச்சர்கள் பேட்டி    

இனிமேல் மீனவர்கள் உயிரிழப்பு நிகழக்கூடாது: தங்கச்சிமடத்தில் மத்திய அமைச்சர்கள் பேட்டி    

இனிமேல் தமிழக மீனவர்கள் உயிரிழப்பு எதுவும் நிகழக்கூடாது என்று ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்த பின்னர் ...

தங்கச்சி மடம்: இனிமேல் தமிழக மீனவர்கள் உயிரிழப்பு எதுவும் நிகழக்கூடாது என்று ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்த பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ கடந்த வாரம் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு காரணமான இலங்கை கடற்படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சி மடம் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மீனவர்களை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்பொழுது போராட்டத்தைக் கைவிடுமாறு மீனவர்களை அவர்கள்  இருவரும் வலியுறுத்தினர். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது:

பொன் ராதாகிருஷ்ணன் :

பதவி ஏற்ற  பிறகு நமது பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்தபோது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். அப்பொழுது கூட தமிழக மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தையின்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மீனவப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவப் பிரநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறேன். மீனவர்கள் தங்கள் போராட்டங்களை உடனே வாபஸ் பெற வேண்டும்

நிர்மலா சீதாராமன்:

இனி ஒரு முறை மீனவர் உயிரிழப்பு சம்பவம் என்பது நடைபெறக் கூடாது. மீனவர்களின்போராட்டம் தொடர்பாக உடனே தொடர்பு கொண்டு பேசுமாறு பிரதமர் மோடி எங்களை பணித்தார். குறிப்பாக மரணம் அடைந்த மீனவரின் தாயாரோடு பேசுமாறு கேட்டுக் கொண்டார்.  இனி மீனவர்களுக்கு  பிரச்சினை ஏற்படாது என்று அவர் உறுதி கூறியுள்ளார். மீனவர்களுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருப்பது பாரதிய ஜனதா அரசங்கம் மட்டும்தான். மீனவர்கள் அமைப்புடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை பிரதமரும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.  எனவே போராட்டத்தை கைவிட்டு இறந்த மீனவருக்கு உரிய இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இவ்வாறு அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com