சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.பிகளுடன் நாளை நண்பகல் சந்திக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது அதிமுக சட்ட விதிகளின் படி செல்லாது என்று பன்னீர்செல்வம் தலைமையிலான அதிருப்தி அதிமுக அணியின்ர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸுக்கு சசிகலா தரப்பு நீண்ட விளக்கம் ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. சசிகலா தரப்பு கூறியுள்ள விளக்கத்தை பொறுத்து, பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் சில விளக்கங்களை கோரி இருந்தது. அதற்கு விரிவான பதில் ஒன்றை பன்னீர்செல்வம் சார்பு வழக்கறிஞர்கள் நேற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.பிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நாளை நண்பகல் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் ஆர்.கே நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் பன்னீர்செல்வம் சார்பில் முன்னாள் டி.ஜி.பி திலகவதி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.அவ்வாறு அவர்கள் போட்டியிடும் பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள்.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கல் உண்டாகி, சின்னமே முடக்கி வைக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலையில் பன்னீர்செல்வத்தின் தில்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.