சென்னை: எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவையின் தலைவரான தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சி ஒன்று தொடங்குவதாக அறிவித்துளார்.
மாதவன் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னால் அவர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்பொழுது அவர் கூறியதாவது:
தீபா துவங்கியுள்ள பேரவையில் தீய சக்திகள் சிலவற்றின் தலையீடு உள்ளது. அவர் தன்னிச்சையாக செயல்படுவது கிடையாது. தகுந்த நேரம் வரும்போது அந்த தீய சக்திகளை யாரென்று வெளிப்படுத்துவேன்.
தற்போது புதிதாக கட்சி ஒன்று துவக்க உள்ளேன். தீபா துவங்கியிருப்பது பேரவை. நான் துவக்க உள்ளது கட்சி. நான் கட்சி துவங்க இருப்பது தொடர்பாக தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
நடக்க உள்ள ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்களின் கருத்தைக் கேட்ட பிறகு முடிவு செய்யப்படும்.
இவ்வாறு மாதவன் தனது பேட்டியில் தெரிவித்தார்.