வங்கிகளைப் போல், அஞ்சலக ஏடிஎம் அட்டையில் சேவைக் கட்டணம் கிடையாது, அனைத்து வங்கியிலும் அட்டை மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அஞ்சகத்தில் கணக்கு தொடங்க மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து, வங்கிகளில் மாதக் கணக்கிலும், மணிக் கணக்கிலும் காத்திருந்த ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வங்கிகளின் மீது அதிருப்தியில் இருந்தனர்.
மேலும், அடிக்கடி வங்கியில் இருப்பு வைப்பது, சேவைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அறிவித்ததால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில், அஞ்சலகக் கணக்கு சேமிப்பு குறித்து காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் கடம்பத்தூரில் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், உதவி கண்காணிப்பு மேற்பார்வையாளர்கள் எம்.ராஜு, அருள்தாஸ், கேசவன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடையே அஞ்சலகத்தில் எளிய முறையில் கணக்கு தொடங்குவது குறித்து விளக்கினர்.
அப்போது, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 50 செலுத்தி கணக்கு தொடங்கலாம். ரூ. 50 முதல் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம். தேவையான நேரத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அஞ்சலகத்தில் வழங்கப்படும் ஏடிஎம் அட்டை மூலம், எந்த வங்கி ஏடிஎம்மிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எவ்வித சேவைக் கட்டணமும் கிடையாது என விளக்கிக் கூறினர்.
இதையடுத்து வங்களின் அதிகாரப் பிடியில் இருந்து தப்பிக்க அஞ்சலக சேமிப்புக் கணக்கு மாற்றுத் தீர்வாக உள்ளது எனக் கூறிய கடம்பத்தூர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், அந்த முகாமிலேயே கணக்கை தொடங்க ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
இதுகுறித்து உதவி கண்காணிப்பு மேற்பார்வையாளர் எம்.ராஜு கூறுகையில், அஞ்சலகத்தில் உள்ள சேமிப்புக் கணக்கு குறித்து பொதுமக்களிடையே அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
மேலும் பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்புக்காக செல்வமகள் திட்டம், தங்க மகள் திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றார்.