தனியார் குளி்ர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணி நதியில் இருந்து தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டக்கிளை சார்பில் சிந்துபூந்துறையில் தாமிரவருணி ஆற்றில் விவசாயிகள் திங்கள்கிழமை இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு அமைப்பின் மாநில பொதுச்செயலர் பெ. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் பி. வேலுமயில் (நெல்லை), கே.பி. பெருமாள் (தூத்துக்குடி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில குழு உறுப்பினர் தி. கணபதி, மாவட்டத் தலைவர் உ. முத்துபாண்டியன், துணைத் தலைவர்கள் பி. சுப்பையா, டி. சீனிவாசன், எம்.எஸ். நல்லசாமி, துணைச் செயலர்கள் எம். கண்ணன், என்.எஸ். கணேசன், புொருளாளர் எம். ராமகிருஷ்ணன், எஸ்.கே. பழனிச்சாமி, பி. கற்பகம், கே.ஏ. மல்லிகா உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில பொதுச்செயலர் பெ. சண்முகம் கூறியது: தாமிரவருணி ஆற்றில் மழைக் காலங்களில் மட்டுமே உபரி நீர் செல்கிறது. ஆனால் ஆண்டு முழுவதும் தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.
விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்கு பற்றாக்குறை இருக்கும் நிலையில் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் உபரிநீர் வழங்குவதாக அறிக்கை அளித்த பொதுப்பணித்துறை செயலர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து தரப்பினரையு்ம ஒருங்கிணைந்து நதியை பாதுகாக்க வலியுறுத்தி தொடர்ப் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.