மதுரை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த தேதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முறையாக ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுவதில்லை என்று ஓய்வுபெற்ற ஊழியர் கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கில் மனுதாரர்களாக உள்ள ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கு தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதே போல் ஒவ்வொரு மாதமும் குறித்த தேதியில் ஓய்வூதியம் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.