சென்னை: நெல்லை தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பசுமைத் தீப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் ஜீவநதியான நெல்லை தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கப்படுவதாக முத்துராமன் என்பவர் தேசிய பசுமைத் தீப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பசுமைத் தீர்ப்பாயம் இன்று பிறப்பித்த உத்தரவு விபரம் வருமாறு:
தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கப்படுவதாக கூறப்படுவதன் உண்மை நிலவரம் குறித்த தகவல்களுடன் திருநெல்வேலி சுற்றுச்சூழல் பொறியாளர், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக பொதுப்பணித்துறையின் நெல்லை மணடல கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்டோர் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.